சுபாங் ஜெயா, ஏப்ரல் 12- நிவாரண உதவி பெறுவதில் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக கருதும் அல்லது எந்த உதவியும் பெறாத புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் உடனடியாக பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மறுசரிபார்ப்பு சோதனை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பின் தகுதியுள்ள அனைத்து உதவி பெறுநர்களையும் மாநில அரசு ஏற்கனவே பட்டியலிட்டுள்ளது. மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தங்களுக்கு முழு தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் நபர்கள் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதன் வழி நாங்கள் மறுசரிபார்ப்பு சோதனைகளை மேற்கொள்ள முடியும். தற்போது வரை நாங்கள் முழுமையான சரிபார்ப்புகளை நடத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
புத்ரா ஹைட்ஸில் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட 265 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கிய பின்னர் அமிருடின் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்கிடையில், வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடர அனுமதிக்கும் வகையில் பாதிக்கப்பட்டப் பகுதியில் வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 14) முதல் மாநில அரசு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தும் என்று அவர் குறிப்பிட்டார.
திங்கட்கிழமை வாக்கில் நாங்கள் பாதுகாப்பை சிறிது தளர்த்தலாம். சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் அல்லது திருட்டு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இதற்குப் பிறகு சிறிய சேதம் ஏற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிப்போம் என்று அவர் சொன்னார்.








