கோலாலம்பூர், ஏப். 9- சீனப் பிரஜை ஒருவர் லைசென்ஸ் இன்றி ஒட்டிய
லம்போர்கினி அவான்தாடோர் ஆடம்பரக் காரை கோலாலம்பூர் சாலை
போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இங்குள்ள ஜாலான் பங்சாரில் மேற்கொள்ளப்பட்ட 2025 நோன்புப் பெருநாள்
ஒருங்கிணைந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது அந்த கார்
பறிமுதல் செய்யப்பட்டது.
சமூக ஊடக உள்ளடக்கப் படைப்பாளராக வேலை செய்யும் 28 வயதுடைய
அந்த ஆடவர் கெப்போங்கில் உள்ள துரித உணவகம் ஒன்றில் நடைபெற்ற
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் டாமன்சாரா ஹைட்சில் உள்ள தனது
வீட்டிற்கு தமக்குச் சொந்தமான அந்த ஆடம்பரக் காரில் வந்து
கொண்டிருந்த போது சாலைத் தடுப்பில் நிறுத்தப்பட்டார்.
அந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 27
வாகனங்களில் அந்த வெளிநாட்டுப் பிரஜையின் ஆடம்பரக் காரும்
அடங்கும் என்று கூட்டரசு பிரதேச சாலை போக்குவரத்து இலாகா
இயக்குநர் ஹமிடி ஹடாம் கூறினார்.
இந்த பெருநாள் கால சோதனை நடவடிக்கைகளின் போது மொத்தம் 1,627
வாகனங்களை சோதனை செய்து 211 வாகனங்களுக்கு எதிராக அமலாக்க
நடவடிக்கை எடுத்தோம். மேலும் இந்த சோதனைகளில் 24 மோட்டார்
சைக்கிள்கள், இரண்டு லோரிகள் மற்றும் ஒரு கார் பறிமுதல்
செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
வாகனமோட்டும் லைசென்ஸ், கனரக வாகன லைசென்ஸ் மற்றும்
காப்புறுதி இல்லாதது, வாகனங்களை மாற்றியமைத்தது உள்ளிட்ட
காரணங்களுக்காக வாகனமோட்டிகளுக்கு 463 குற்ற அறிக்கைகள்
வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு நோன்புப் பெருநாள் ஒருங்கிணைந்த
சோதனை நடவடிக்கைக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைக் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 115
அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக அவர் மேலும்
சொன்னார்.


