ஷா ஆலம், ஏப். 9 - எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.
ஒன்பது மாவட்டங்களையும் இலக்காகக் கொண்ட இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, உற்பத்தி, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தரப்பினர் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் மாநில அரசின் முயற்சியாக இந்த வேலை வாய்ப்புச் சந்தை விளங்குகிறது என்று அவர் மீடியா சிலாங்கூரின் பிச்சாரா செமாசா நிகழ்ச்சியில் கூறினார்.
இதனிடையே, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பெறுவது தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இடைநிலைப் பள்ளிகளில் விழிப்புணர்வு திட்டத்தை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திட்டம் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (திவேட்) அல்லது திறன் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் வருமானத்தை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில அரசு இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை முன்னெடுத்தது.
கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையின் வழி சிலாங்கூர் மக்களுக்கு ஏறக்குறைய 35,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.


