ஆயேர் குரோ, ஏப்ரல் 7 - மலேசியாவுக்கு 24 விழுக்காடு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாட்டின், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி சற்று பாதிக்கப்படலாம்.
இந்த அறிவிப்பு மற்ற நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், ஆசியான் நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரும் வட்டார நாடுகளின் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க முற்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், நாட்டின் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க அல்லது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
மலாக்கா, ஆயேர் குரோவில் மலாக்கா அனைத்துலக வணிப மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 2025ஆம் ஆண்டுக்கான மடாணி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு பேசிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
இப்பிரச்சனைக்கு தீர்வுக் காண விவாதங்கள் அவசியம் என்பதோடு, நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
ஆசியான் நாட்டுத் தலைவர்களுடன், கலந்து ஆலோசித்து பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள சிறந்த உடன்பாட்டை மேற்கொள்ள புத்ராஜெயா, முயற்சிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
-பெர்னாமா


