கோலாலம்பூர், பிப். 4 - நாட்டையே உலுக்கிய சுபாங் ஜெயா, புத்ரா
ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை
அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த இச்சம்பவத்திற்கான காரணம்
தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கான விடையை இந்த
அறிக்கை அளிக்கும் என கருதப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய இந்த
அறிக்கையை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன்
ஓமார் கான் வெளியிடுவார் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
இந்த சம்பவத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் அலட்சியம்
அல்லது குற்றவியல் கூறுகளுக்கான சாத்தியத்தையும் ஹூசேன்
தெளிவுபடுத்துவார் என்று அவர் சொன்னார்.
தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான விசாரணையை பொதுப்பணித்
துறை, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, பெட்ரோனாஸ்
உள்ளிட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் வேளையில் அலட்சியப்
போக்கு மற்றும் குற்றவியல் தன்மை குறித்து காவல் துறை விசாரணை
நடத்தும் என்றுஅவர் குறிப்பிட்டார்.
இந்த தீச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட
காணொளிகளையும் விசாரணைக் குழு ஆய்வு செய்யும். அவசியம்
ஏற்பட்டால் உறுதிப்படுத்துதல் நடவடிக்கைக்காக அந்த பதிவுகளை
பதிவேற்றம் செய்தவர்களை காவல் துறை அழைக்கும் என்றார் அவர்.
பாதுகாப்புச் சோதனைகள் முற்றுப் பெற்றவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
மறுவாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறிய அமிருடின்,
அங்கு பாதிக்கப்பட்ட 85 வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அந்த தீச்சம்பவத்தில் 87 வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு
முழுமையாக அழிந்து போனது மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின்
சோதனையில் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


