சுபாங் ஜெயா, ஏப். 3 - புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹர்மோனியில்
நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தற்காலிக
பயன்பாட்டிற்காக 30 கார்களை இலவசமாக வழங்க கார் விற்பனை
நிறுவனமான கார்ரோ முன்வந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் போன்ற இதர வாகனங்களையும் பெறுவது
தொடர்பில் இதர நிறுவனங்களுடனும் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் அலுவலகம் இதற்கான பதிவு நடவடிக்கையை மேற்கொண்டு
வருகிறது. வாகனங்கள் தேவைப்படுவோர் தங்கள் பெயரைப் பதிந்து
கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
நாங்கள் தேவையின் அளவை மதிப்பீடு செய்து வருகிறோம். அதே சமயம்,
பாதிக்கப்பட்டவர்களின் தற்காலிக பயன்பாட்டிற்காக வாகனங்களைப்
பெறுவதற்காக பல நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்று
அவர் குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக
பயன்படுத்துவதற்கு ஏதுவாக 50 கார்களை வழங்குவதாக செரி நிறுவனம்
நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெர்ஜெயா பெர்ஹாட் குழுமத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ
வின்சன்ட் டானும் 3,000 வெள்ளி நிதியை ஒதுக்கியுள்ளதாகவும்
அந்நிதியை அவர் விரைவில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்
என்றும் அந்தோணி லோக் சொன்னார்.
நாங்கள் முன்னெடுத்து வரும் உதவி திட்டங்களில் இவையும் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தருவதற்காக அமைச்சு நிலையில் நாங்கள் பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


