கூச்சிங், ஏப்ரல் 2 - புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவில் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை.
தீபகற்ப மலேசியாவில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தினாலும் விநியோகம் இன்னும் நிலையாக இருப்பதை இதுவரை பெறப்பட்ட அறிக்கைகள் காட்டுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
'நமது மின் உற்பத்தியில் ஒரு பகுதிக்கு எரிவாயு தேவை. கசிவு ஏற்பட்டால் சில எரிவாயு விநியோகம் தடைப்படும். அதனால் அது மின்சார விநியோகத்தைப் பாதிக்கலாம். ஆனால், இதுவரை எனக்குக் கிடைத்த அறிக்கைகள் சாதகமாக உள்ளது," என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகம் தடைப்பட்டால் மாற்று நடவடிக்கைகளை வகுப்பதற்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானது என்று அவர் விளக்கினார்.
'கிள்ளான் பள்ளத்தாக்கில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பழைய மின் உற்பத்தி இயந்திரங்களை மீண்டும் தொடங்குவதே, நாங்கள் மேற்கொள்ளும் அடுத்த நடவடிக்கை ஆகும்," என்று அவர் விவரித்தார்.
கூச்சிங்கில் நடைபெற்ற நோன்பு பெருநாள் விருந்து உபசரிப்பில், எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.
பெர்னாமா


