ஷா ஆலம், ஏப். 1- சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ர ஹைட்ஸில் எரிவாயு குழாயில் இன்று காலை ஏற்பட்ட தீ சுமார் 500 மீட்டர் பகுதியை உள்ளடக்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
சம்பவ இடத்தில் தீ வானுயரத்திற்கு கொளுந்து விட்டெரிவதாகவும் அருகிலுள்ள வீடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
சுற்றுவட்டாரத்திலுள்ள வீடுகளுக்கும் தீ பரவியுள்ளதோடு மூத்த குடிமக்கள் உள்பட எழுவர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேத மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எரிவாயு வால்வுவை பெட்ரோனாஸ் அடைத்து விட்டது. (எவ்வளவு தொலைவுக்கு எரிவாயு வால்வு அடைக்கப்பட்டது என்று தெரியவில்லை) என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்து தொடர்பில் இன்று காலை 8.10 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் 12 நிமிடங்களில் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைந்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
சுபாங் ஜெயா, ஷா ஆலம், பூச்சோங், ரவாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 78 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையமாக மூடியுள்ளனர்.








