NATIONAL

பெருநாள் காலத்தில் தலைநகரில் அதிக விபத்து நிகழும் 14  இடங்கள்- போலீசார் அடையாளம் கண்டனர்

28 மார்ச் 2025, 2:01 AM
பெருநாள் காலத்தில் தலைநகரில் அதிக விபத்து நிகழும் 14  இடங்கள்- போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர், மார்ச் 28 - நோன்புப் பெருநாளை  முன்னிட்டு மார்ச்  23 முதல் ஏப்ரல் 6 வரை அமல்படுத்தப்படும் 'ஓப் லஞ்சார்' சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது  தலைநகரில்  அடிக்கடி விபத்துகள் நிகழும்  பிளாக்ஸ்போட் எனப்படும் 14 இடங்களையும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள 61 பகுதிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜாலான் துன் ரசாக், ஜாலான் கூச்சிங், ஜாலான் ஈப்போ, ஜாலான் கெபோங், ஜாலான் லோக் யூ, ஜாலான் சைட் புத்ரா, ஜாலான் செராஸ், டூத்தா-உலு கிளாங் விரைவுச்சாலை (டியுக்), மத்திய சுற்றுச் சாலை  2 (எம்.ஆர்.ஆர்.2) மற்றும் கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை ஆகியவை அதிக விபத்துகள் நிகழும் அந்த 14 சாலைகளில் அடங்கும் என கோலாலம்பூர் துணை போலீஸ்  தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் கூறினார்.

பெஸ்ராயா விரைவுச்சாலை, கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை (மெக்ஸ்), மேற்கு கோலாலம்பூர் போக்குவரத்து பரவல் திட்ட விரைவுச்சாலை (ஸ்ப்ரிண்ட்) மற்றும் சுங்கை பீசி-உலு கிளாங் மேம்பால  விரைவுச்சாலை  ஆகியவையும் அடையாளம் காணப்பட்ட பிற இடங்களாகும் என அவர் சொன்னார்.

'ஓப் லஞ்சார்' அமலாக்க காலம் முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இந்தப் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்  என்று அவர் நேற்று கோலாலம்பூர் பெவிலியனில் நடைபெற்ற 2025 நோன்புப் பெருநாள்  24வது ஓப் செலாமாட்  சாலை பாதுகாப்பு இயக்க நிகழ்வுக்குப் பின் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இது தவிர, சிகாம்புட் சாலை சுற்றுவட்டம் , பத்து சாலை சுற்றுவட்டம்  கெப்போங் சாலை  சுற்றுவட்டம் மற்றும் சுங்கை பீசி   சுற்றுவட்டம் உள்ளிட்ட அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள 61 இடங்கள் மீது காவல்துறை கவனம் செலுத்தும் என்று அஸ்ரி அக்மார் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை  உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த  ஓப் செலாமாட் 24 சாலை பாதுகாப்பு இயக்க காலம் முழுவதும் மொத்தம் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் 17 மூத்த அதிகாரிகளும்   320 உறுப்பினர்களும் பணியில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

இந்த பண்டிகைக் காலத்தில் சாலையைப் பயன்படுத்தும் அனைவரின்  பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகப் பொதுமக்கள் எப்போதும் கவனமாக இருக்கவும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவும் அவர் நினைவூட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.