NATIONAL

ஜோகூர், சபாவில் வெள்ளம் தணிகிறது - 1,991 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

25 மார்ச் 2025, 5:06 AM
ஜோகூர், சபாவில் வெள்ளம் தணிகிறது - 1,991 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 25 - ஜோகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,991 பேர்   21 தற்காலிக நிவாரண  மையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 2,593 பேராக இருந்தது.

ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வரும் நிலையில்  நேற்று 2,455 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு 1,853 பேராகக் குறைந்துள்ளது.  அவர்கள் அனைவரும்  ஐந்து மாவட்டங்களில் உள்ள 20 வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூர் பாரு மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது  680 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அதைத் தொடர்ந்து பத்து பஹாட் (621), பொந்தியான் (410), குளுவாங் (74) மற்றும் கோத்தா திங்கி (68) ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

வெள்ளம் வடிந்து  குடியிருப்புப் பகுதிகளில் நிலைமை பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டப் பின்னர்  பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து  கஹாங்கில் உள்ள குளுவாங் நகராண்மைக் கழக  மண்டபம் மற்றும் குளுவாங்கில் உள்ள கஹாங் சீன தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த இரண்டு  நிவாரண மையங்கள் நேற்றிரவு மூடப்பட்டன என்று அவர்  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் பத்து பஹாட் தவிர இதர இடங்களில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்  கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சபா மாநிலத்தின்  பியூபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

41 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேராக தொடர்ந்து உள்ளது. அவர்கள் அனைவரும் டேவான் சிலாங்கூன் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பியூபோர்ட்டில் எட்டு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சபா பேரிடர் மேலாண்மைச்  செயலகம் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.