கோலாலம்பூர், மார்ச் 20 - மார்ச் 17ஆம் தேதி வரை மக்கள் வருமானத் திட்டம், ஐ.பி.ஆர்.-இல் இணைய 6,287 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய தொழில்முனைவோர் திட்டம் (இந்தான்), உணவு தொழில்முனைவோர் திட்டம் (இன்சான்) மற்றும் வறுமை துடைத்தொழிப்பு திட்டம் (பி.எம்.தி) ஆகிய முதன்மை மூன்று திட்டங்களைச் சேர்ந்தவர்களே அந்த பங்கேற்பாளர்கள் ஆவர்.
இந்நடவடிக்கை குறைந்த வருமானம் பெறும் மலேசிய மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதலின் வழி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகப் பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிபா ஹஜார் தயிப் தெரிவித்தார்.
ஐபிஆர்-இந்தான்-னின் கீழ், 3,628 பங்கேற்பாளர்களில் 517 பேர் முதற்கட்ட வருமானத்தைப் பெற தொடங்கி விட்டனர். அவர்கள் மாதத்திற்கு 2000லிருந்து 6,000 ரிங்கிட் வரை வருமானத்தை ஈட்டுவதாக ஹனிபா கூறினார்.
"எனினும், ஐபிஆர்-இந்தான் பங்கேற்பாளர்களுக்கு மாதாந்திர அறுவடைக்கு முந்தைய அலவன்ஸ் 500 ரிங்கிட் வழங்கப்படுவதைத் தொடர்ந்து, அவர்களில் பெரும்பகுதியினர் 1,700 ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட வருமானத்தைப் பெறுகின்றனர்." என்று அவர் தெரிவித்தார்.
1,700 ரிங்கிட் வருமானக் கோட்டைக் கடந்திருக்கும் ஐ.பி.ஆர் திட்டப் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறித்து செனட்டர் முஹமட் ஹஸ்பி முடாவிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
--பெர்னாமா


