கோலாலம்பூர், மார்ச் 13 - AI நுட்பவியல் துறையில் இந்தியர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக இலவசமாக சிறப்புப் பயிற்சிகளை இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் மொழியிலும் அப்பயிற்சி வழங்கப்படுவதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீனம் என நான்கு மொழிகளில் பயிற்சி வழங்கப்படும். இதன்வழி, மக்கள் இலக்கவியல், நுட்பவியல் அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
`Rakyat Digital` என்ற செயலி வாயிலாக வீட்டிலிருந்தவாரே இந்தப் பயிற்சியில் இந்தியர்கள் கலந்துகொள்ளலாம் என கோபிந் சிங் தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு அறிமுகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு என 3 வகையான பயிற்சிகளை மலேசிய இலக்கவியல் கூட்டுறவுக் கழகம் வழங்குகிறது. இப்பயிற்சியில் பங்குகொள்வோருக்கு சான்றிதழும் வழங்கப்படும்.


