புத்ராஜெயா, மார்ச் 13 - ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் (ஏ.எஸ்.எஃப்.) பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பன்றிகளை சிப்பாங் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்லும் முயற்சியை சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை மற்றும் சிப்பாங் மாவட்ட காவல்துறை கடந்த மார்ச் 10 ஆம் தேதி மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது முறியடித்தன.
கால்நடை சேவைத் துறையின் ஒப்புதல் இல்லாமல் பன்றிகளை கொண்டு சென்றதாகக் சநாதேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குனர் டாக்டர் ஹஸூசானா கலீல் தெரிவித்தார்.
சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை அதிகாரிகள் சந்தேக நபரின் லோரியைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது 'டோன்டோ' எனப்படும் அந்த லோரிக்கு பாதுகாப்பு அளிக்கும் இரண்டு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் அவர்களின் வாகனத்தை இடைமறிக்க முயன்றன.
இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை சிப்பாங் காவல் நிலையத்தின் உதவியை நாடியது. இதன் விளைவாக, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் சுங்கை பீலேக்கில் உள்ள ஜாலான் பெசாரில் அந்த மூன்று வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன என்று அவர்அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையில் 17 பன்றிகள், இரண்டு பன்றி உடல்கள், ஒரு லாரி மற்றும் இரண்டு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் 1953 ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும், 30 மற்றும் 50 வயதுடைய இரண்டு 'டோன்டோ'க்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் ஹசஸூசானா மேலும் கூறினார்.


