மெர்சிங், மார்ச் 13 - சாலையைக் கடந்த யானைக் குட்டி மீது கார் ஒன்று மோதியதில் அதன் ஓட்டுநரான முதியவர் காயமடைந்தார். இச்சம்பவம் ஜாலான் நிதார்-மெர்சிங் சாலையின் 30வது கிலோமீட்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.
கழுத்து மற்றும் இடது மணிக்கட்டில் காயங்களுக்குள்ளான அந்த 70 வயது முதியவர் குளுவாங் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லா சானி
தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு இரவு 9.00 மணியளவில் பொதுமக்களிடமிருந்து
தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
குளுவாங்கிலிருந்து மெர்சிங் நோக்கி டோயோட்டா அல்டிஸ் காரில் பயணித்துக் கொண்டிருந்த அந்த முதியவர் சாலையைக் கடந்து கொண்டிருந்த யானைக் கூட்டத்திலிருந்த குட்டி யானையையுடன் மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் கண்டறியப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தின் காரணமாக காரில் சிக்கிக் கொண்ட அந்த முதியவரை பொதுமக்கள் மீட்டனர். கழுத்து மற்றும் இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் குளுவாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மடிந்த அந்த யானைக் குட்டியின் உடலைக் கையாள்வதற்காக மெர்சிங் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறைக்கு (பெர்ஹிலித்தான்) தாங்கள் புகார் அளித்ததாக அப்துல் ரசாக் கூறினார்.
வனவிலங்குகள் கடக்கும் பகுதிகளில், குறிப்பாக இரவு வேளைகளில் பயணிக்கும் போது எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனைத்து வாகனமோட்டிகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.


