கோலாலம்பூர், மார்ச் 11 - 2008-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் உள்ள 49 சிகிச்சையகங்கள் அதனைச் செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை மணி 5 தொடங்கி இரவு மணி 9.30 வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையில் நீட்டிக்கப்பட்ட நேரம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த நேர நீட்டிப்பின் போது, 49 சிகிச்சையகங்களில், 43 சிகிச்சையகங்கள் 592,000 மேற்பட்ட நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.
"2024 ஆம் ஆண்டு, STAR எனும் பொதுத்துறை சீர்திருத்தத் சிறப்புப் பணிக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 சிகிச்சையகங்களில் 6 சிகிச்சையகங்கள் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக, லுகானிஸ்மான் கூறினார்.
இதனிடையே, மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கருத்துகளுக்கு இணங்க, மாற்று வேலை நேரத் திட்டத்தை (WBB) சுகாதார அமைச்சு மீட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


