ஷா ஆலம், மார்ச் 11 - கிள்ளான், பண்டார் பொட்டானிக் பகுதியில் நிகழ்ந்த கைகலப்பை விலக்கிவிட முயன்ற பொழுதுபோக்கு மையத்தின் பாதுகாவலரை கார் மோதியதில் அவர் இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளானார்.
நேற்று அதிகாலை அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது 33 வயதான அந்த நபர், வாடிக்கையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை சக பாதுகாவலர்களுடன் தடுக்க முயன்ற போது காரினால் மோதப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபூங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த நபர் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு வலது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அடிவயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைகலப்புக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.30 மணியளவில் 43 வயது நபரை போலீசார் கைது செய்ததாக அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 307 மற்றும் 148 பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபருக்கு மூன்று முந்தையக் குற்றப் பதிவுகளும் போதைப்பொருள் குற்றங்களுக்கான ஒரு பதிவும் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
முன்னதாக, இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு நிகழ்வதை காட்டும் ஒரு காணொளி பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.


