ஷா ஆலம், மார்ச் 11- மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இவ்வாண்டு முழுவதும் சிலாங்கூர் மாநிலத்தில் ஒற்றுமை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மாநிலம் எப்போதும் சுபிட்சமாக இருப்பதை உறுதி செய்வதற்கான இலக்கை அடைய பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
சிலாங்கூர் நாட்டின் அச்சாக விளங்குவதோடு பல்வேறு இனங்கள் மற்றும் சமய மக்களையும் கொண்டுள்ளது. எனவே இனங்களுக்கு இடையே நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் அவசியம் இருக்க வேண்டும். இதற்கான திட்டங்களை மாநில அளவில் நாங்கள் எப்போதும் ஏற்பாடு செய்வோம் என அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் மத்திய அரசு அமைப்புகளின் ஒத்துழைப்பையும் உள்ளடக்கியுள்ளது. மிக அண்மையில் அனைத்து இனங்களின் பங்கேற்புடன் கோம்பாக்கில் ஒரு நோன்புக் கஞ்சி சமையல் திட்டத்தை நாங்கள் நடத்தினோம் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
இதற்கிடையில், மக்கள் இனப் பிரச்சினைகளை பெரிதுபடுத்தவோ அல்லது ஒருவருக்கொருவர் தூண்டிவிடவோ வேண்டாம் என்று சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் அறிவுறுத்தினார்.
பிரச்சினை இருந்தால் முறைப்படி புகார் அளித்து சட்டத்தின்படி அதனைத் தீர்க்கலாம். ஏனென்றால் எங்களிடம் ஒரு அரசியலமைப்பு முறை உள்ளது. சரியான வழிகளைப் பயன்படுத்துங்கள். பொருத்தமற்ற சூழல்களை உருவாக்கக்கூடிய சமூக ஊடகங்களை அல்ல என்று அவர் தெரிவித்தார்.
இன அல்லது சமயப் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் சமரசமற்ற நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் உத்தரவிட்டார்.


