சிரம்பான், மார்ச் 7- கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரு இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1, மாத்தாஹரி ஹைட் சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகில் நேற்றிரவு நிகழ்ந்தது.
இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 15 மற்றும் 16 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் பின்னால் பயணித்தவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஹத்தா சே டின் தெரிவித்தார்.
பதினெட்டு வயது இளைஞர் ஒருவர் தனது 17 வயது பெண் பயணியுடன் செனாவாங்கிலிருந்து பாரோய் நோக்கி ஹோண்டா ஜாஸ் காரில் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது ஓட்டுநர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் காரை நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் பயணித்த மோடேனாஸ் கிறிஸ் மோட்டார் சைக்கிளும் இடதுபுறத்தில் இருந்து வந்த மற்றொரு ஹோண்டா வேரியோ மோட்டார் சைக்கிளும் கார் மீது மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த மோதலின் விளைவாக பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. காரின் ஓட்டுநர் மற்றும் பயணி, மற்றொரு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் ஆகியோர் பலத்த காயங்கள் காரணமாக சிகிச்சைக்காக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர் கூறினார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பின்னர் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜி. சங்கரை 014-6000353 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


