கோலாலம்பூர், மார்ச் 3 - மாதம் சுமார் 1,300 வெள்ளி நிச்சயமற்ற வருமானத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தி வரும் குவாந்தான், கம்போங் செராட்டிங் பாருவைச் சேர்ந்த மீனவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்த நன்கொடையை பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பௌசி சமீபத்தில் முஸ்தாபா மூடா என்ற அந்த மீனவரை பகாங்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.
முஸ்தாபாவின் குடும்பத்தினர் மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ அவரது வீட்டை புதுப்பிக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அகமது ஃபர்ஹான் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
சிதிலமைடைந்த சுவர்கள், ஒழுகும் கூரை மற்றும் சிமெண்ட பெயர்ந்த தரை என பாழடைந்த நிலையில் உள்ள வீட்டில் முஸ்தாபாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வருவதாக அவர் கூறினார்.
இந்தக் குடும்பத்திற்கு உதவுவதற்கான அடையாளமாக பிரதமரின் சார்பாக ரொக்க நன்கொடையையும் நான் வழங்கினேன். அவர்கள் ஆடம்பரத்தைக் கேட்கவில்லை. மாறாக, தங்குவதற்கு வசதியான இடத்தைத்தான் கேட்கிறார்கள்.
இந்த உதவி அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் வளமான வாழ்க்கையை நோக்கிய முதல் படியாக இருக்கும் என்று நம்புகிறேன் என அகமது ஃபர்ஹான் தெரிவித்தார்.


