ஷா ஆலாம், மார்ச் 3 – கடந்த பிப்ரவரி 20 வரை, சிலாங்கூரின் சில மாவட்டங்களில் 5 தொழுநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரியில் உலு லங்காட் மற்றும் சிப்பாங்கில் 2 சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்த மாதம் கோம்பாக், உலு சிலாங்கூர், கோலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் 3 சம்பவங்கள் பதிவாகின.
இதில் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒரு பூர்வக்குடி உட்பட மூவர் உள்நாட்டவர் என மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கல்சோம் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், அவர்கள் வீட்டில் சிகிச்சையைத் தொடருவர், என்றாலும் தனிமைப்படுத்தல் தேவையில்லை. சிறார்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை.
தற்போது நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. குஷ்ட நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதால் பொது மக்களும் கவலையடைய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
தொழுநோய்க்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து, மருத்துவப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


