கோலாலம்பூர், பிப். 27 - சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்கிற்கு எதிராக குற்றவியல் ரீதியாக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பழத்தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 வெள்ளி அபராதம் விதித்தது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க 36 வயதான லிம் சாய் செங் என்ற அந்த ஆடவருக்கு மாஜிஸ்திரேட் அய்னா அசாஹ்ரா அரிஃபின் உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 1.37 மணிக்கு செந்தூல், ஜாலான் பார்லிமென்ட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டலை விடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கரேன் கவுர், நடந்த சம்பவத்திற்கு தனது கட்சிக்காரர் வருத்தப்படுவதோடு அச்செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கருணை மனுவில் கூறினார். அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஹென்ச் கோ வழக்கை நடத்தினார்.


