கோலாலம்பூர், பிப் 27 – எதிர்வரும் சனிக்கிழமைத் தொடங்கி, வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை, சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கு அமுலுக்கு வரவிருந்த நிலையில், அந்நடவடிக்கை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான சிறப்பு விளக்கக் கூட்டத்தின் போது, அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் அதனைத் தெரிவித்ததாக, செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வேலை நேர முறையின் கீழ் தாதியர்கள் கூடுதலாக 3 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இது தாதியர்களிடையே பெரும் கவலையை உண்டாக்கியுள்ள நிலையில், இந்த 3 மாதங்களில் அதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என லிங்கேஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது தற்காலிகமே என்றாலும், கேக.கே.எம். பணியாளர்களுக்கான வேலை நேரம் நியாயமாக இருப்பதை உறுதிச் செய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
ஷிஃவ்ட் முறையில் வேலை செய்யும் தாதியர்களுக்கு, பொதுச் சேவை ஊதிய முறையின் கீழ், நடப்பில் 42 மணி நேரமாக உள்ள வேலை நேரத்தை, 45 மணி நேரமாக மாற்றுவதற்கு உத்தரவு வந்தது முதலே இவ்விவகாரம் சர்ச்சையானது.
ஏற்கனவே வேலைப் பளு அதிகம் உள்ள தாதியர்களுக்கு, இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் தாதியர்கள் அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து பெருமளவில் வெளியேற வாய்புண்டு.
அப்புதிய உத்தரவு கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. எனினும், பெரும் எதிர்ப்பைப் பெற்றதால், டிசம்பர் 1-ஆம் தேதி அமுலுக்கு வர வேண்டிய அவ்வேலை முறை இவ்வாண்டு மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


