NATIONAL

நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடாணி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல

26 பிப்ரவரி 2025, 9:24 AM
நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடாணி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல

கோலாலம்பூர், பிப் 26 - நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடாணி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல. மாறாக, நகர்ப்புற புதுச்செயலாக்க வழிக்காட்டி வகுக்கப்பட்ட 2012-ஆம் ஆண்டு முதலே இத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் முழுவதிலும் மேம்பாட்டு செயல்முறைகளை மேற்கொள்ள நகர்ப்புற புதுச்செயலாக்க சிறப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கக்கட்ட கலந்துரையாடல்கள், 2015-ஆம் ஆண்டில் அச்சட்டத்தை வகுப்பதற்கு முன்னதாக, 2013-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் எடுத்துரைத்தார்.

கோலாலம்பூர் மாநகராண்மை கழகத்தின் கீழ், 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய நகர்ப்புற புதுச்செயலாக்க திட்டத்திற்கு 2020-ஆம் ஆண்டில் கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அன்னுவார் முசா தலைமை ஏற்றதை டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், வீடமைப்பு முன்னாள் அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் 2021-ஆம் ஆண்டில், நகர்ப்புற புதுச்செயலாக்க சட்ட மசோதாவை வகுக்கத் தொடங்கினார்.

“2022-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி கேபிகேடி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரிசால் மெரிக்கன் அதே கொள்கையைத் தொடர்ந்தார். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர், டிபிகேஎல் புதுச்செயலாக்கத்திற்கு அடையாளம் காணப்பட்ட 30 பகுதிகள் குறித்து தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு முதல், 74 சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்”, என்று அவர் கூறினார். மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசியலமைப்பில் 13-ஆவது சட்டவிதியில் விளக்கப்பட்டுள்ளது போன்று, கட்டாயத்தின் பேரில் எந்தவொரு இனத்தைச் சேர்ந்த நில அல்லது வளாக உரிமையாளரும் விரட்டப்படாததை உறுதிசெய்ய நகர்ப்புற புதுச்செயலாக்க சட்ட மசோதா பரிந்துரை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகக் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கர் ஹிங் முன்னதாக கேள்வி எழுப்பினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.