ஜோகூர், பிப் 26 - இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஜோகூர், டேசாருவில் நடைபெறவிருக்கும் 31-ஆவது ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் 2025-ஐ முன்னிட்டு, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் நிர்வகிப்பிலான அனைத்துலக ஊடக மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு ஆசியான் உச்சநிலை மாநாடு முழுவதிலும் அதிகாரப்பூர்வ ஊடகமாகவும் அனைத்துலக ஊடக மைய ஒருங்கிணைப்பாளராகவும் பெர்னாமா உள்நாடு மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு செய்திகளையும் புகைப்படங்களையும் வழங்குவது உட்பட அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
அந்த அனைத்துலக ஊடக மையத்தில் பணியிடம், அதிவேக ஆற்றல் கொண்ட இணைய வசதி, தேநீர் இடம், தகவல் முகப்பு, நேர்காணல் நிர்வகிப்பு போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் குறித்த செய்திகளைச் சேகரிக்க அதிகாரப்பூர்வ மற்றும் அனைத்துலக ஊடகம் உட்பட இதுவரை 98 ஊடகங்கள் பதிந்து கொண்டுள்ளன.


