கோலாலம்பூர், பிப் 25 – இவ்வாண்டு நாட்டில் ஏற்படவிருக்கும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை கடந்தாண்டு போல் மோசமாக இருக்காது என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
தற்போது நிகழும் La Nina வானிலையின் தாக்கமே அதற்கு காரணமாகும். இந்நிலை இவ்வாண்டு மத்தி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
புகைமூட்டம் மற்றும் வெப்ப வானிலை ஏற்படுவதற்கான சாத்தியங்களை இப்போதே கூற இயலாது, காரணம், தென்மேற்குப் பருவ மழையின் கடுமை மற்றும் அண்டை நாடுகளின் வானிலையையும் பொருத்தே அது அமையும் என விளக்கினார்.
அக்காலக்கட்டத்தில் அண்டை நாடுகளில் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகள் மோசமானால், அதன் கரும்புகை மலேசியாவைப் பாதித்து புகை மூட்ட பிரச்னையை ஏற்படுத்தும்.
இவ்வேளையில் வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் முடிவுக்கு வந்ததும், வானிலை மாற்றம் மார்ச் மத்தியில் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
ரமலான் நோன்பு மாதத்தில், நாடு முழுவதும் காலையில் வானிலை நன்றாகவும், மாலை மற்றும் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் அந்நிலைக் காணப்படும்.


