NATIONAL

ரப்பர் பதனீட்டுத் தொழிற்சாலையில் வெடி விபத்து - இருவர் பலி, எழுவர் காயம்

25 பிப்ரவரி 2025, 6:55 AM
ரப்பர் பதனீட்டுத் தொழிற்சாலையில் வெடி விபத்து - இருவர் பலி, எழுவர் காயம்

தங்காக், பிப். 25 - இங்குள்ள ரப்பர் உற்பத்தி மற்றும் பதனீட்டுத் தொழிற்சாலையில் நேற்று மாலை இயந்திரம் வெடித்ததில் இரு உள்நாட்டுத்  தொழிலாளர்கள் பலியானதோடு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில்  45  மற்றும் 50 வயதுடைய இருவர்  பலியானதாக தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரோஸ்லான் முகமது தாலிப் கூறினார்.

காயங்கள் காரணமாக   தங்காக் மற்றும் மூவார் மருத்துவமனைகளுக்கு கொண்டு  செல்லப்பட்ட  அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு பிற்பகல் 2.00 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூறிய அவர்,  இயந்திரத்தில் தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்றார்

செயல்பாட்டில் இருந்த ஐந்து  இயந்திரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ​​அவற்றில் ஒன்று வெடித்தது. அதில்  ஒன்பது தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட மற்ற ஏழு பேர் இன்னும் மூவாரில் உள்ள சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு , விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.