கோலாலம்பூர், பிப் 24 - விவசாய துறை சார்ந்த கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி (திவெட் திட்டம்) ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை, மாறாக, இத்துறையில் திவேட் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
திவேட் பட்டதாரிகளுக்கான சராசரி வேலைவாய்ப்பு 94.5 விழுக்காட்டை எட்டியுள்ள நிலையில் மாராவின் கீழ் செயல்படும் திவேட் கல்வி கழகங்களின் பட்டதாரிகள் எண்ணிக்கை 98.7 விழுக்காடாகவும், அதில் 80 விழுக்காடு விவசாயத் துறையைச் சார்ந்து இருப்பதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''இந்த விவகாரத்தை நான் பரிசீலிப்பேன். மேலும், தேசிய திவேட் திட்டம் எனது பொறுப்பின் கீழ் உள்ளது. விவசாய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நான் உறுதி செய்வேன்,'' என்றார் அவர்.
ஒவ்வோர் ஆண்டும் விவசாயத் துறை சார்ந்த திவேட் பட்டதாரிகளின் எண்ணிக்கை 600-ஆக மட்டுமே இருப்பதால் அதனை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் அமின் ஹமிட் மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி இவ்வாறு பதிலளித்தார்.


