ஈப்போ, பிப் 24 - இவ்வாண்டு, கண்ட இடங்களில் குப்பை கொட்டும் குற்றங்களை தடுக்க 12 மணி நேரம் சமூக சேவையை மேற்கொள்வதற்கான உத்தரவு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசிப்புகள் பல முறை நடத்தப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
2007-ஆம் ஆண்டு திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புரவு சட்டம், சட்டம் 672, சாலை சட்டம், 1974-ஆம் ஆண்டு வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம், சட்டம் 133 ஆகியவற்றில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சமூக சேவையை மேற்கொள்வதற்கான கட்டளையை அமல்படுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு முன்னதாகப் பரிந்துரைத்திருந்தது.
பொதுமக்களுக்கு தூய்மை குறித்தும், பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இச்சமூக சேவையின் நோக்கம் என்று ஙா கோர் மிங் விளக்கினார்.
மேற்கண்ட சட்டங்களில் திருத்தம் செய்ய எதிர்வரும் மார்ச் 6-ஆம் தேதி தாம் மக்களவையில் தாக்கல் செய்யவிருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.


