மனாமா (பாஹ்ரின்), பிப். 19 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை பாஹ்ரின்
வந்தடைந்தார். பாஹ்ரின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான்
ஹமாட் அல் கலிபாவின் அழைப்பின் பேரில் அவர் இப்பயணத்தை
மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் பயணம் செய்த விமானம் இன்று அதிகாலை 12.45 மணியளவில்
பாஹ்ரின் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தது.
பிரதமரின் பயணக் குழுவில் பிரதமர் துறை அமைச்சர் (சமய
விவகாரங்கள்) டாக்டர் ஜூல்கிப்ளி ஹசான் மற்றும் உயர் அரசாங்க
அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பாஹ்ரின் அரசின் கனிவான
வரவேற்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமருக்கு நிலைக் காவல்
படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.
பிரதமரை பாஹ்ரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல் லத்திப் ரஷிட்
அல் ஜயானி, முஹாராக் துணை கவர்னர் ஜெனரல் ஜாசிம் முகமது அல்
கத்தாம், மலேசிய அரச தந்திரி டாக்டர் வாலீட் கலிபா அல் மீனியா
ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்த பயணத்தின் போது பிரதமர் அன்வார் பட்டத்து இளவரசர்
சல்மானுடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை மேற்கொள்வார். பின்னர்
அவர் பாஹ்ரின் மன்னர் ராஜா ஹமாட் இசா அல் கலிபாவுடன் சந்திப்பு
நடத்துவார். இந்த உயர் மட்டச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான
வலுவான உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நிதியமைச்சருமான அன்வார் பாஹ்ரின் பிரதமர் ஷேக் சல்மான்
கலிபாவுடன் சந்திப்பு நடத்தும் அதேவேளையில் மலேசியா மற்றும்
பாஹ்ரின் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாஹ்ரின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் கலந்துரையாடல் நடத்துவார்.


