செமினி, பிப் 18 - இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்பதை கட்டாயமாக்கும் பொருட்டு, திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் இம்முறை மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம்.
அச்சட்ட திருத்தத்திற்கான ஆதரவை உறுதி செய்வதற்கு இன்னும் முக்கிய தரப்புகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்கும் கட்டாயக் கொள்கையில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும். எனவே, இம்முறை இது நாடாளுமன்ற கூட்டத்தில் இடம்பெறும் என்று நம்புகிறோம். எனினும், இச்சட்டத் திருத்தத்திற்கான ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தரப்பும் எங்களுடன் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன.,'' என்றார் அவர்.
2025 / 2026-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணையின் தொடக்க நாளான நேற்று, செமினி, தாமான் பிலாங்கி தேசியப் பள்ளிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியுடன் வருகை புரிந்த போது ஃபட்லினா சிடேக் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கூடுதல் மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 17 புதிய பள்ளிகள் திறக்கப்பட்டது, கூடுதல் அறைகள் அமைக்கப்பட்டது, குறிப்பிட்ட பள்ளிகளில் காலை மற்றும் பிற்பகல் ஆகிய இரண்டு வேளையில் பள்ளி செயல்படுத்துதல் ஆகியவை அதில் அடங்கும்.


