கோலாலம்பூர், பிப் 17 - பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம், அதன் தொடர்புடையக் குழுவினருக்கு முழுமையான பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும்.
அத்திட்டத்தின் பலவீனத்தையும், மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் ஆராய சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தங்கள் தரப்பு பகுப்பாய்வைப் பெறவிருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''இத்திட்டத்தை நாங்கள் கடந்தாண்டில் மேற்கொண்டோம். ஆனால், சில நேரங்களில் தகவல்கள், பொருட்கள் அனுப்பும் சேவையைச் செய்பவர்களைச் சென்றடைவதில்லை. எனவே, வருங்காலத்தில் அதுபோன்ற அமலாக்கத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். இதற்கு காரணம், பொருட்கள் அனுப்பும் சேவையைச் செய்பவர்களுக்கு அதற்கான பலன்கள் கிடைப்பதில்லை,'' என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் பி-ஹெய்லிங் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான 33 ரிங்கிட் பி-ஹெய்லிங் ரஹ்மா இணைய திட்டத்தை தொடர்பு அமைச்சின் வழி அரசாங்கம் தொடக்கி வைத்தது.


