கோலாலம்பூர், பிப். 14 - நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 26 லட்சம்
வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் போலி பணக் கோரிக்கை
தொடர்பில் ‘டத்தோ‘ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட நால்வரை மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரான அந்த டத்தோ மற்றொரு
நிறுவனத்தின் இயக்குநருடன் சேர்ந்து நில விற்பனை டெண்டரைப்
பெறுவதற்கு பிரதியுபகாரமாக கையூட்டு வழங்க முன்வந்ததாகக்
கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 50 முதல் 60 வயது வரையிலான இரு
நிறுவன இயக்குநர்கள், இரு மூத்த உதவித் தலைவர்களும் அடங்குவர்
என எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.
அந்த லஞ்சத் தொகை கிள்ளானில் நிலத்திற்கான டெண்டரைப்
பெறுவதற்காக மலேசியாவைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்
ஒன்றின் அதிகாரிக்கு வழங்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது.
நிறுவன இயக்குநர் டத்தோ அந்தஸ்து கொண்ட இயக்குநர் மற்றும் இரு
உதவித் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து போலியான ஆவணங்களைப்
பயன்படுத்தி நிறுவனத்திலிருந்து 26 லட்சம் வெள்ளியை மீட்டு மற்றொரு
நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக அந்த ஊழல் தடுப்பு
ஆணைய வட்டாரம் குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க
வந்த சம்பந்தப்பட்ட நிறுவன உயர் அதிகாரிகளும் கணக்கு நிர்வாகியும்
நேற்று மாலை 5.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடையே கைது
செய்யப்பட்டனர்.
அந்த டத்தோ வரும் திங்கள் கிழமை வரை நான்கு நாட்களுக்கும் ஒரு
பெண் உள்ளிட்ட இதர மூவரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று
நாட்களுக்கும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் கணக்கு நிர்வாகி எம்.ஏ.சி.சி. ஜாமீனில்
விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை
உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. விசாரணைப் பிரிவு முதன்மை இயக்குநர்
டத்தோ ஜைனுள் டாருஸ், இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி.
சட்டத்தின் 16(பி)(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.


