கங்கார், பிப் 13 – நாட்டிலுள்ள 122,062 முதலாம் ஆண்டு மாணவர்களில், இதற்கு முன் படிக்கத் தெரியாமலிருந்த 48,000 பேருக்கு தற்போது படிக்க, எழுத மற்றும் எண்ணத் தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்ட தலையீட்டுத் திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
இத்திட்டம், எழுத்தறிவு சவால்களை எதிர்கொள்பவர்களை ஆதரிப்பதிலும், அவர்கள் அத்தியாவசியத் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக, கல்வித் துணைத் தலைமை இயக்குநர் டால்டர் ருஸ்மினி கூ அஹ்மாட் கூறினார்.
இப்போது 48,000 மாணவர்களுக்கு படிக்க, எழுத, எண்ணத் தெரிந்திருப்பது, இத்திட்டத்தின் நேர்மறையான தாக்கத்திற்கு சான்று என அவர் சொன்னார்.
கூடுதல் ஆதரவு தேவைப்படுபவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான அமைச்சின் கடப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி இடைவெளியைக் குறைக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் தேவை என்று ருஸ்மினி மேலும் கூறினார்.


