புத்ராஜெயா, பிப் 6 - 40 விழுக்காட்டுக்கும் குறைவாக நிகர வருமானத்தைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், கடன் விண்ணப்பிப்பதற்காக வழங்கும் ஊதிய சீட்டுகளை அங்கீகரிப்பதில், அரசாங்க நிறுவனங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில், நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் பல அரசாங்க ஊழியர்கள், தனிநபர் கடன் வழங்கும் கும்பல்களிடம் சிக்கி தவிப்பதாக பொது சேவை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அசிஸ் கூறுகின்றார்.
''அண்மையில் 4,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்ட செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தை நான் கடுமையாகக் கருதுகின்றேன். தனிப்பட்ட நிதி நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ளும் பொது அதிகாரிகள் இன்னும் இருப்பதால் இதுபோன்று சம்பங்கள் நிகழ்கிறன,'' என்று அவர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டின் பொது சேவைத்துறை ஊழியர்களுடனான சந்திப்பின்போது வான் அஹ்மாட் இவ்வாறு தெரிவித்தார்.
நிதி அபாயங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற கடன் சலுகைகளால் எளிதில் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, அரசு ஊழியர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க, பொது சேவைத்துறை தனிநபர் நிதி நிர்வாக மாதிரியை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.


