கோலாலம்பூர், பிப். 4 - நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் தொடர்பாக ஒரு நபரிடம் 100,000 வெள்ளிக்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்கு இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படியும் விதித்தது.
முகமது ஃபிக்ரி அப்துல் மானான் (வயது 41) என்ற அந்த ஆடவருக்கு இத்தண்டனையை வழங்கிய நீதிபதி அஸ்ருல் டாருஸ், சிறைத்தண்டனையை இன்று முதல் அனுபவிக்க உத்தரவிட்டார்.
நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் வழி பெரிய வருமானம் ஈட்டித் தருவதாக உறுதியளித்து 63 வயதான முகமது நூர் சாலே என்பவரை ஏமாற்றியதாக முகமது ஃபிக்ரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வாக்குறுதியால் கவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் கடந்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு இங்குள்ள வங்சா மாஜுவில் உள்ள ஒரு உணவகத்தில் 110,030 வெள்ளியை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.


