கோலாலம்பூர், பிப் 3 – தாதியர் டிப்ளோமா கல்வி திட்டத்தில் சேர்வதற்கான நுழைவு நிபந்தனையில் எஸ்.பி.எம் தேர்வில் 5 பாடங்களில் கிரடிட்டிலிருந்து மூன்று பாடங்கள் கிரடிட் பெற்றிருக்க வேண்டும் என தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மலாய் மொழி, கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் கிரடிட் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு ஆங்கிலம் உட்பட இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாண்டு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான தாதியர் டிப்ளோமா கல்வி திட்டத்திற்கு மட்டுமே இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்த காரணங்களின் அடிப்படையில் இந்த தளர்வு உள்ளது. தாதியர் டிப்ளோமா கல்வி திட்டத்திற்கான நிபந்தனை தளர்த்தப்பட்ள்ளது குறித்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாலகி வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மலேசியாவில் தாதியர் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் சுகாதார பராமரிப்புக்கான தேவையை நிறைவு செய்யத் தவறினால் நாட்டின் சுபிட்சத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற தாதியர் வாரிய கூட்டத்தில் இந்த விவகாரம் சமர்ப்பிக்கப்பட்தோடு அந்த வாரிய உறுப்பினர்கள் அனைவரும் தாதியர் டிப்ளோமா பயிற்சி திட்டத்திற்கான நிபந்தனை தளர்வுக்கு இணக்கம் தெரிவித்திருந்த தகவலையும் சுல்கிஃப்ளி வெளியிட்டார்.


