கோலாலம்பூர், பிப் 3: நாட்டின் எல்லைகளில் செயல்படும் ஒரே நிறுவனமாக ஏ.கே.பி.எஸ் எனப்படும் எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தை அரசாங்கம் தொடங்கியது.
சுமூகமான மற்றும் திறமையான எல்லைக் கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான மடாணி அரசாங்கத்தின் உறுதியை ஏ.கே.பி.எஸ் புலப்படுத்துவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா தெரிவித்தார்.
நாடு முழுவதும் விமான நிலையங்கள், தரை எல்லைகள் மற்றும் துறைமுகங்களின் நுழைவாயிலில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பல்வேறு அரசாங்க துறைகளின் நிபுணத்துவத்தையும் வளங்களையும் ஏ.கே.பி.எஸ் ஒருங்கிணைப்பதாக அனைத்துலக நுழைவாயில் எல்லை நெரிசல் செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
“ஏ.கே.பி.எஸ்-ஐ அமைப்பது சாதாரண நடவடிக்கை அல்ல. கடந்த 2018ஆம் ஆண்டு ஏ.கே.பி.எஸ் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் வழி, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் SBA எனப்படும் ஒரே தேசிய எல்லை நிறுவனக் குழுவை உருவாக்க வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றிருக்கும் வேளையில், ஏ.கே.பி.எஸ்சின் அவசியத்தை அங்கீகரிக்கும் வகையில் அதன் அறிமுகம் அமைந்துள்ளதை ஃபடில்லா சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், கடல், வான் மற்றும் தரை எல்லைப் பாதுகாப்பை பராமரிக்கும் பொருட்டு தற்போதுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், ஏ.கே.பி.எஸ் செயல்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மை 19 நுழைவாயில்களில் ஏ.கே.பி.எஸ் தற்போது செயல்படுவதோடு, கட்டம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


