கோலாலாம்பூர், பிப் 3: கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை மேற்கொண்ட ஓப் செலாமாட் 23 சோதனை நடவடிக்கையில் 700 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி மாற்றி அமைக்கப்பட்ட 72 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறை 789 அபராதங்களையும் சாலைப் போக்குவரத்துத் துறை 250 அபராதங்களையும் வெளியிட்டன.
சிறிய அளவுடைய சக்கரங்கள் மற்றும் அதிகச் சத்தத்தை உண்டாக்கும் புகைவெளியேற்றக் கருவிப் பொருத்தப்பட்டது உட்பட ஓட்டுநர் உரிமமும் காப்புறுதியும் இல்லாததே முதன்மை குற்றங்களாக இருந்ததாக, கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி தலைவர் ஏ.சி.பி. முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார்.
" விபத்துகளைக் குறைக்கும் நோக்கமுடைய இச்சோதனை நடவடிக்கை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நடத்தப்பட்டது, `` என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஓப் செலாமாட் 23 சோதனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா


