மலாக்கா, ஜன 27 - நாடு முழுவதிலும் தொழில்துறை சார்ந்த 67 பகுதிகளை, 5ஜி இணைய சேவையை வழங்கும் நோக்கில் தொடர்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
MITI ஒத்துழைப்புடன் அந்த அனைத்து தொழில்துறை பகுதிகளையும் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சால் அடையாளம் காணப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''இந்த பகுதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். ஏனெனில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5ஜி இணைய சேவையின் தேவை மிக அதிகமாகும். எனவே இந்த 5ஜி மூலம் தொழிற்சாலைகள் வேகமான இணைப்பைப் பயன்படுத்தி பயனடைவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்,'' என்றார் அவர்.
மலாக்காவில் 2025-ஆம் ஆண்டுக்கான தொடர்புத்துறை அமைச்சின் திட்டங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, மக்களிடையே 5ஜி இணைய பயன்பாட்டின் விகிதம் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று விழுக்காடு அதிகரித்து, நாடு முழுவதும் சுமார் 53.3 விழுக்காட்டை எட்டியிருக்கும் கூடுதல் தகவலையும் ஃபஹ்மி பகிர்ந்து கொண்டார்.


