அபுடாபி, ஜன. 15 - தரவு மையம் உள்ளிட்ட உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி துறைகளில் முதலீடு செய்யும்படி ஐக்கிய அரபு சிற்றரசின்
(யு.ஏ.இ.) முதலீட்டாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்று நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு சிற்றரசு சென்ற பிரதமர் அந்நாட்டு
அறங்காப்பு நிதி நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தினார்.
ஐக்கிய அரபு சிற்றரசுக்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
நிறுவனமான மாஸ்டாருடன் பேச்சு நடத்திய அவர், பசுமை எரிசக்தி
திட்டங்கள், அடிப்படை வசதிகள், பேட்டரி சேமிப்பு, மின்பாதையை
வலுப்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் மலேசிய நிறுவனங்களுடன்
அந்நிறுவனம் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்
தர அரசாங்கம் தயாராக உள்ளதாகக் கூறினார்.
அபுடாபி முதலீட்டு முகமையைப் (ஏ.டி.ஐ.ஏ.) பொறுத்த வரை 2030 மடாணி
திட்ட வரைவு, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
தொடர்பான திட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது என அவர் சொன்னார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு. ஆர்.இ., பொருள் பட்டுவாடா, சுகாதார
பராமரிப்பு, இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட
துறைகளையும் இது உள்ளடக்கியுள்ளது என்று ஐக்கிய அரபு சிற்றரசுக்கான
மூன்று நாள் பயணத்தின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.
மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தனியார் மயத் திட்டத்தில்
உலகளாவிய உள்கட்டமைப்ப பங்காளிகளுடன் கூட்டாகச் செயல்படுவது
தொடர்பான ஏ.டி.ஐ.ஏ.வின் விருப்பத்தையும் மலேசியா வரவேற்றுள்ளது
என்று அன்வார் குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபர் ஷேக் முகமதுவுடன் நடத்தப்பட்ட
சந்திப்பில், வரும் மே மாத இறுதியில் மலேசியாவில் நடைபெறவிருக்கும்
ஆசியான்-ஜி.சி.சி. உச்சநிலை மாநாட்டில் அதிபரின் பங்கேற்பு குறித்தும்
விவாதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.


