கோலாலம்பூர், ஜன 10: இலக்கிடப்பட்ட டீசல் மானிய முறையின் கீழ் அரசாங்கம் ஆண்டுக்கு 7.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட இது கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
கடந்தாண்டு ஜூலையில் அறிமுகமான டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பின் கீழ், மாதத்திற்கு 200 மில்லியன் ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் வரையிலும் மிச்சமாகும் என்று தான் முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது மாதத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் வரை மிச்சமாவதாக அவர் சொன்னார்.
ஆக இத்தனை காலமும் நாம் கணித்ததை விட மானியக் கசிவு மோசமாக இருந்துள்ளது என்றார் அவர்.
இலக்கிடப்பட்ட மானிய முறை, கசிவைத் தடுக்க பெரிதும் உதவியுள்ளது என மலேசியப் பொருளாதார ஆய்வரங்கில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் விளக்கினார்.
2019-ல் 1.4 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த டீசல் உதவித் தொகைக் கசிவு, 2023-ல் பத்து மடங்கு அதிகரித்து 14.3 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியது.
இதை அடுத்து, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பயனர்களுக்கு இலக்கிடப்பட்ட மானிய முறையை அமுல்படுத்த அமைச்சரவை முடிவுச் செய்துள்ளதாக கடந்தாண்டு மே மாதம் பிரதமர் அறிவித்திருந்தார்.


