NATIONAL

உறவினரை கத்தியால் குத்தியதாகப் பதின்ம வயது பெண் மீது குற்றச்சாட்டு

7 ஜனவரி 2025, 8:36 AM
உறவினரை கத்தியால் குத்தியதாகப் பதின்ம வயது பெண் மீது குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம், ஜன. 7- தன் உறவினரான 34 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகப் பதின்ம வயதுப் பெண் ஒருவருக்கு எதிராக இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் முகமது ஹரித் முகமது மஸ்லான் முன்னிலையில் தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டை  14 வயதுடைய  அப்பெண் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இங்குள்ள செபராங் பெராய் தெங்கா, ஜாலான் பிராய் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே  விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை  5,000  வெள்ளி ஜாமீனில் விடுவிக்க  அரசு தரப்பு வழக்கறிஞர்  ஜூல்ஃபாட்லி ஹசான் பரிந்துரைத்தார்.  அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் முஹைமின் ஹஷிம், தனது கட்சிக்காரர் இன்னும் பள்ளியில் பயிலும் சிறுமி என்பதால்  ஜாமீன் தொகையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது  என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் குற்றம் சாட்டப்பட்டவரை   3,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 20ஆம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.