ஜோர்ஜ்டவுன், டிச 27- பல்வேறு கற்றல் திறனுடன் தமிழ்க் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில், 2024ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநில தமிழாசிரியர் பன்னாட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ்க் கல்வியின் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்துவதில் ஆசிரியர்களின் வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சிக்கு இம்மாநாடு முக்கிய தளமாக அமைந்துள்ளது.
பினாங்கில் முதல் முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அம்மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி, தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளியைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் கலந்து கொண்டதாக மாநில தமிழ்மொழி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் முனைவர் பொன்னுதுரைராஜ் மாரிமுத்து தெரிவித்தார்.
அதோடு, இம்மாநாட்டின் போது 56 ஆசிரியர்கள் தங்ளின் ஆய்வுகளின் முடிவுகளைத் தாக்கல் செய்தனர். அதே வேளையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய 28 குழுக்கள் புத்தாக்கப் போட்டியில் பங்கெடுத்ததாக அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, அவர்களின் படைப்புகளை பாராட்டும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டதாக முனைவர் பொன்னுதுரைராஜ் தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாடு டிசம்பர் 21ஆம் தேதி தொடர்ங்கி 22ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவை பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் நிறைவு செய்து வைத்தார்.
- பெர்னாமா


