கோலா திரங்கானு, டிச. 19: மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தும் வரை மாறி மாறி தாக்கிய வழக்கை விசாரிக்க அரசு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 12 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட 20 முதல் 22 வயது வரை உள்ள அனைத்து ஆண் மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக கோலா திரங்கானு மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் வான் முகமட் சாகி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது என தெரிய வந்தது.
"இரவு 10.50 மணி அளவில் இச் சம்பவத்தை பற்றி பாதிக்கப்பட்ட மாணவர் தனது தந்தையிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதைக் காட்டும் பல புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.
பின்னர், அம்மாணவர் தனது தந்தையால் டிசம்பர் 16 (திங்கட்கிழமை)அன்று
சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்," என்று வான் முகமட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் இடது மற்றும் வலது கைகள், வலது இடுப்பு, மார்பு, வயிறு மற்றும் வலது காலில் ஓர் ஆயுதம் மூலம் தாக்கப்பட்டதில் காயங்கள் மற்றும் உள் காயங்கள் இருந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப் படுத்தியதாக வான் முகமட் சாகி கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
– பெர்னாமா


