ஷா ஆலம், டிச. 15- கெஅடிலான் கட்சி வெளிப்படையான கொள்கையைக் கொண்டுள்ளதோடு கட்சிக்கு பங்களிப்பவர்களை உறுப்பினராக சேர்க்கவும் அது தயாராக உள்ளது.
புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்கும் பணி சமூகமான முறையிலும் இதரக் கட்சிகளை குறிப்பாக கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுடனான உறவைப் பாதிக்காத வகையிலும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்று கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாம் வெளிப்படையான கொள்கையைக் கொண்டுள்ளோம். கட்சிக்கு பங்களிக்கக் கூடியவர்களை அம்னோ உள்பட இதரக் கட்சிகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் சமூகமான முறையில் இணைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
எங்களின் அனுபவதைப் பொறுத்த வரை நாம் கட்சித் தாவலை ஆதரிக்கவில்லை. அதே சமயம் அதனை நாம் தடுக்கவும் இல்லை. கட்சிகளுக்கு இடையிலான நல்லுறவின் அடிப்படையில் அவர்களின் முடிவை நாம் மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.
இங்குள்ள செக்சன் 7, டேவான் ராஜா மூடா மூசாவில் இன்று நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிசை கெஅடிலான் கட்சியில் சேர்ப்பது தொடர்பில் பூர்வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதையும் அன்வார் ஒப்புக் கொண்டார்.
நாம் வாய்ப்பு வழங்கியுள்ளதோடு பேச்சுவார்த்தையும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நாம் யாரையும் அழைக்கவில்லை. எனினும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். நமது கட்சியில் முன்னாள் அம்னோ உறுப்பினர்களும் உள்ளனர் என்றார் அவர்.
விரைவில் கெஅடிலான் கட்சியில் சேரவிருக்கும் ஸப்ருள் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை ஏற்பார் என அண்மைய காலமாக ஆருடங்கள் பரவி வருகின்றன.








