புத்ராஜெயா, டிச. 5 - நாட்டின் வரவு செலவுத் திட்டம் மற்றும் வளர்ச்சிக் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மட்டுமன்றி அதன் பலன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த கட்டமைப்பு சமநிலையை ஏற்படுத்துவதற்கும் , வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
இலக்கவியல் மற்றும் உரு மாற்றங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
ஆகவே, கணிசமான லாபத்தைப் பதிவு செய்யும் வங்கிகள் போன்ற பெரு நிறுவனங்கள் அடிதட்டு ஏழை தொழிலாளர் வர்க்கத்தின் அவலநிலையைக் கருத்தில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அவர்களின் உணவுப் பாதுகாப்பு, வீட்டு நிலைமை மற்றும் சம்பளம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஓட்டுநர்களின் குடும்பங்கள் மற்றும் மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள குடும்ப பராமரிப்பாளர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நிதியமைச்சின் மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலவையில் நேற்று 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதியமைச்சருமான அன்வார், நாட்டின் வளர்ச்சி விகிதம் கணிப்புகளை தாண்டி பதிவாகும் பட்சத்தில், இந்த வெற்றியைக் கண்டு அரசாங்க இயந்திரம் மனநிறைவை கொண்டுவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.


