ஷா ஆலம் நவ.21- அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணியிடங்களை நிரப்புவதில் அந்நியத் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு ஏதுவாக நியாயமான ஊதியத்துடன் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கேட்டுக் கொண்டார்.
அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு மலேசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நியாயமான ஊதியம், உகந்த வேலை சூழல், சலுகைகள் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
இந்த முன்னுரிமை வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பதற்கும் உள்ளூர் பணியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் பெரிதும் துணை புரியும் என அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் நிலையங்களில் உள்ள காஃபே மற்றும் பல்பொருள் அங்காடிக் கடைகளில் அந்நியத் தொழிலாளர்களை பணிக்கமர்த்த அனுமதிக்கும் உள்துறை அமைச்சின் முடிவு தொடர்பில் குணராஜ் இந்த கருத்தை வெளியிட்டார்.
பெட்ரோல் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் அறிவித்திருந்தார். அமைச்சரின் இந்த முடிவு வளர்ந்து வரும் தொழில்துறையின் தேவைகளை பிரதிபலிக்கிறது. ஆனால் மலேசியர்களுக்கான முன்னுரிமையை நாம் புறக்கணிக்க முடியாது. மிகக் குறைவான ஊதியங்கள் உள்ளூர் தொழிலாளர்களை ஈர்க்காது.
மேலும் இது குறைந்த வருவாயை சார்ந்திருக்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கான கதவைத் திறக்கும் என்று அவர் கூறினார். பெட்ரோல் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களை முகவர் மூலமாக எடுக்காமல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் நேரடியாக வேலைக்கு அமர்த்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையும் பாராட்டுக்குரியது.
இதன் மூலம் தங்களை வேலை வாய்ப்பு முகவர்கள் என்று அழைக்கும் நேர்மையற்ற இடைத்தரகர்களின் சுரண்டலை அகற்ற முடியும் என்று குணராஜ் கூறினார்.


