ஷா ஆலம், நவ. 20 - குறைந்த பட்ச சம்பள விகிதத்தை மாதம் 1,700
வெள்ளியாக உயர்த்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
அறிவிப்புக்கு ஏற்பட சமூக சேவை மைய ஊழியர்களின் ஊதியத்தையும்
மறுசீரமைப்பு செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
வாடகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சியினர் உள்பட
அனைத்து சமூக சேவை மையங்களுக்கும் வழங்கப்படும் மாதாந்திர நிதி
ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசு தற்போது பல்வேறு பரிந்துரைகளை பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப சமூக சேவை மையத்தின் அதிகாரிகள்
உள்பட அனைத்து பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதும் அந்த
பரிந்துரைகளில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் சமூக
சேவை யைமங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஒதுக்கீட்டை
அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வாடகைக்கான செலவினம் அதிகரித்து வருகிறது. தஞ்சோங்
காராங்கில் வாடகை 2,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்கலாம். அதே
சமயம் பெட்டாலிங்கில் அதிகமாக இருக்கும். ஆகவே. சுமையைக்
கருத்தில் கொண்டு அனைத்து அம்சங்களையும் விரிவாக
ஆராயவிருக்கிறோம் என அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை பிலேக் சட்டமன்ற உறுப்பினர் வீ
கியான் கியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
கூறினார்.
இதனிடையே, மாதாந்திர மற்றும் வாராந்திர நிகழ்வுகள் காரணமாக சமூக
சேவை மைய பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமைப் பிரச்சனை அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் தீர்க்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நான்கு அதிகாரிகள் என்ற நிலையைத் தொடரவிருக்கிறோம்.
எனினும், நடப்பு திட்டங்களோடு புதிதாக மரண சகாய நிதி திட்டமும்
இணையும் போது ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய சுமையை
ஆராயவிருக்கிறோம் என்றார் அவர்.


