ஷா ஆலம், நவ. 19 - மாநில அரசின் புளுபிரிண்ட் வறுமை ஒழிப்பு
பெருந்திட்டத்தின் வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை
5,645 பேர் பயன் பெற்றுள்ளனர்.
சிறு வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கிலான இந்த
திட்டத்திற்காக இக்காலக்கட்டத்தில் 2 கோடியே 11 லட்சம் வெள்ளி
செலவிடப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
அதே சமயம், இந்திய தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கில் கடந்த
2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக 410
பயனாளிகள் 23 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக
உபகரணங்களைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு திட்டங்களின் மூலம் விவசாயம், சிறு வர்த்தகம் மற்றும் கால்
நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் வருமானத்தை உயர்த்திக்
கொள்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றனர் என்று அவர் மேலும்
சொன்னார்.
வறுமை மற்றும் வருமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம்
இத்திட்டம் சமூகவியல் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றுவதோடு
மக்களின் சுபிட்சத்திற்கும் பங்களிக்கிறது என்று அவர் மாநில
சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
பண்டமாரான் உறுப்பினர் டோனி லியோங் தக் சீயின் துணைக் கேள்விக்கு
பதிலளித்த பாப்பராய்டு, இத்திட்டங்களின் மூலம் உதவி பெறுவோர்
தங்களுக்கு கிடைத்த வரத்தக உபகரணங்களை விற்கக்கூடாது என்று
நினைவுறுத்தினார்.
இந்த தவணை தொடங்கி வழங்கப்படும் உபகரணங்கள் மீது பிரத்தியேக
வில்லைகள் ஒட்டப்படும். ஒப்பந்தத்தை மீறும் பயனாளிகளுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
இந்த வர்த்தக உபகரணங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து
வழங்கப்படுகின்றன. அதனை தங்களின் வர்த்தக நோக்கத்திற்கும்
பொருளாதார உயர்வுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.


