கோலாலம்பூர், நவ. 19 - ஆந்திர பிரதேசத்தின் ஹைதரபாத், காச்சிபோவ்லி
அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற அனைத்துலக முதல் வரிசை நிலை
நட்புறவு கால்பந்துப் போட்டியில் மலேசியாவின் ஹரிமாவ் மலாயா
அணியும் இந்தியாவும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.
ஜோகூர் டாருள் தாக்ஸிம் (ஜே.டி.டி.) மூன்று ஆட்டக்காரர்களால்
சர்ச்சையில் சிக்கியிருந்த ஹரிமாவ் மலாயா அணி, உபசரணை நாடான
இந்தியா தொடக்கத்தில் நடத்திய இடைவிடாத தாக்குதல்களை
எதிர்கொண்டு மிகவும் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் முகமது அசாம் அஸ்மி மூராட் பினால்டி
கட்டத்துக்கு வெளியிலிருந்து அடித்த பந்தை இந்திய கோல் காவலரான
குர்ப்ரிட் சிங் சண்டு வெளியேற்றத் தவறியதைத் தொடர்ந்து
இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாவ்லே ஜோசு
காலியாக இருந்த கோல் கம்பத்தை நோக்கி மின்னல் வேகத் தாக்குதல்
நடத்தி வெற்றி கோலைப் புகுத்தினார்.
எனினும், ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத் கார்னர் கிக்கை சரியாக
பயன்படுத்தி இந்திய அணி கோல் எண்ணிக்கையை 1-1 என
சமநிலைப்படுத்தியது. பிராண்டன் பெர்னாண்டஸ் அடித்த பந்தை ராகுல்
பேக்கெ தலையால் முட்டி கோலாக்கினார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது கோல்எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு இரு அணிகளும் இடை விடாது தாக்குதல் நடத்தின.
ஹரமாவ் மலாயா அணியின் டேனியல் திங் அடித்த மின்னல் வேக
பந்தை குர்ப்ரீட் சிங் வேகமாக தட்டி வெளியேற்றினார்.
இந்த ஆட்ட முடிவின் வாயிலாக கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற
பெஸ்தாபோலா மெர்டேக்கா போட்டியில் இந்தியாவிடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்விக்கு ஹரிமாவ் மலாயா பழி தீர்த்துக் கொண்டது.


